மேலூர் அருகே உள்ள மதுரை கள்ளழகர் கோயிலில் ஆடித் தேரோட்டத் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
மதுரையை அடுத்த கள்ளழகர் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் மாலையில் பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடி பிரமோற்சவ திருவிழாவான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 5.15 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருதேருக்கு சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தயார்களுடன் எழுந்தருளினார்.
தொடர்ந்து காலை 7.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்ட திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ம் தேதி தீர்த்தவாரியும், 17-ம் தேதி உற்சவ சாந்தியும் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.