அத்திவரதர் வைபவத்தை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இன்றுடன் 47 நாட்களாக அத்திவரதர் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அத்திவரத பெருமாளை காண நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சியில் குவிந்து வருகின்றனர். கடந்த 46 நாட்களில் சுமார் 1 கோடி பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்கக்கோரி தென்னிந்திய மஹா சபா சார்பில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மரபு, வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆகம விதிப்படி 48 நாட்களில் அத்திவரதர் குளத்திற்குள் வைக்கப்டுவது தான் மரபு என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.