திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் புகழ்பெற்ற ஆவணித் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை 5.30 மணியளவில் தொடங்கியது. இதில், பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக புதன்கிழமை மாலை முதல் திருச்செந்தூரில் பக்தர்கள் குவியத் தொடங்கினர். பக்தர்கள் வசதிக்காக பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் சி. குமரதுரை உள்ளிட்டோர் செய்துள்ளனர்.