காளஹஸ்தி கோயிலில் டிச. 17 முதல் பூஜை நேரம் மாற்றம்

காளஹஸ்தி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, டிச. 17-ஆம் தேதி முதல் பூஜை நேரத்தை கோயில் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
காளஹஸ்தி கோயிலில் டிச. 17 முதல் பூஜை நேரம் மாற்றம்

காளஹஸ்தி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு, டிச. 17-ஆம் தேதி முதல் பூஜை நேரத்தை கோயில் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
 ஆந்திர மாநிம், காளஹஸ்தியில் உள்ள இக்கோயிலில் மார்கழி மாதம் திருவெம்பாவை பாராயணம் பாடப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை முதல் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் அம்மாதம் முழுவதும் கோயிலில் தினசரி நடைபெறும் பூஜை நேரத்தை கோயில் நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
 அதன்படி, அதிகாலை 3.30 மணிக்கு முதல் மணியோசை, 4 மணிக்கு மங்கள வாத்தியம், 4.15 மணிக்கு திருமஞ்சனம், 4.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை பூஜை (சுப்ரபாதத்துக்கு பதிலாக), 5 மணிக்கு சர்வ தரிசனம், முதல் கால அபிஷேகம் (ஏகாந்தம்), 6 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம் (ஏகாந்தம்), 7 மணிக்கு பரிவார தேவதைகளுக்கு நிவேதனம், 7.30 மணிக்கு கொப்பி தேவதை மாட வீதி புறப்பாடு, 10.30 மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், மாலை 5 மணிக்கு பிரதோஷ கால அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளன.
 மூன்றாம் கால அபிஷேகத்திலும், பிரதோஷ கால அபிஷேகத்திலும் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் இரவு பள்ளியறை பூஜை 9 மணிக்கும், செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் நடைபெறும். இந்த மாற்றம் வரும் டிச. 17-ஆம் தேதி முதல் 2020-ஆம் ஆண்டு ஜன. 14 -ஆம் தேதி வரை நீடிக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
 உண்டியல் காணிக்கை ரூ. 3.16 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ. 3.16 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவற்றை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு, வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், தேவஸ்தானத்துக்கு ரூ. 3.16 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 ரூ. 25.5 லட்சம் நன்கொடை
 திருப்பதி ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். வெள்ளிக்கிழமை அன்ன தான அறக்கட்டளைக்கு ரூ. 25.50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 
 71,152 பக்தர்கள் தரிசனம்
 திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 71,152 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இவர்களில் 15,403 பேர் முடி காணிக்கை செலுத்தினர். சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 19 அறைகளைக் கடந்து, வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனர். தர்ம தரிசனத்தில் 10 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசித்தனர்.
 ரூ. 300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர்.
 வெள்ளிக்கிழமை முழுவதும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 10,389 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,253 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 15,403 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 1,506 பக்தர்களும், கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,296 பக்தர்களும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடர்புத் துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 
 சோதனைச் சாவடியில் ரூ. 2.08 லட்சம் கட்டண வசூல்
 அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 83,194 பயணிகள் சோதனைச் சாவடியைக் கடந்துள்ளனர். 9,655 வாகனங்கள் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அவற்றின் மூலம் ரூ. 2.08 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ. 19,285 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com