கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 
கே.சி.எஸ். ஐயர் கணித்த ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்- 2019 (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்)

2019-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் நமக்கு துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார். 

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் வழக்கத்திற்கு மாறாக சற்று கூடுதலாகவே அமையும். பேச்சில் கம்பீரமும் முகத்தில் வசீகரமும் உண்டாகும். சமூகத்தில் பிரபலஸ்தர்கள் ஆவீர்கள். சிலருக்கு அரசாங்க பாராட்டு மற்றும் விருதுகளும் கிடைக்கும். மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழும் பாக்கியம் உண்டாகும். அனைத்திலும் முழுமையான வெற்றி கிடைக்கும். எதிரிகளும் எதிர்ப்புச் சக்திகளும் இருக்காது. 

சோர்வு, இயலாமை யாவும் அடியோடு நீங்கி சகஜ நிலை உருவாகும். போட்டி பொறாமைகளும் நீங்கி சமரசமாகக் கூடிய சூழ்நிலை உருவாகும். பகைவர்களும் நண்பர்களாக மாறிவிடுவார்கள். நீண்டகால ஆசைகள் நிறைவேறும் வகையில் எண்ணிய எண்ணங்கள் திண்ணமாய் நிறைவேறும். நெடுநாளாகத் தள்ளிப்போய்க் கொண்டிருந்த திருமணம் போன்ற சுபகாரியங்கள் உடனடியாக நடக்கும். சிலருக்கு நீண்ட தூரப்பயணங்கள் செய்ய நேரிடும். 

சிறிதளவு முதலீடு செய்து பெரிதளவு லாபத்தைப் பார்க்கும் தொழிலை தொடங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். இல்லத்திற்கு தேவையான நவீன உபகரணங்களையும் வாங்குவீர்கள். சிலர் சொகுசான வண்டி வாகனங்களை வாங்குவார்கள். நுணுக்கமான அறிவாற்றலால் சிக்கலான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் புதிய முயற்சிகளை நன்கு பரிசீலித்த பிறகே செயல்படுத்துவீர்கள். செயல்களில் படிப்படியாக வெற்றிகளைக் காண்பீர்கள். நண்பர்கள், கூட்டாளிகளுடன் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றுவீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.  வருமானம் நன்றாக இருக்கும். எதிர்காலத்தை வளமாக்கும் திட்டங்களை அடையாளம் கண்டு அவைகளில் முதலீடு செய்வீர்கள். 

வழக்குகளிலும் எதிர்பார்த்த சாதகமான திருப்பங்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் அசையும் அசையாச் சொத்துகள் சேரும் பாக்கியமும் உண்டு. பெயர், புகழ் உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளில் நன்மையும் ஏற்றங்களும் உண்டாகும். உதவி ஆதரவு கேட்பவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் சில தியாகங்களைச் செய்வீர்கள். 

எதிர்ப்போர்களை எதிர்த்துப்போராடி வெற்றி பெறுவீர்கள். சமுதாயத்தில் கௌரவமான பதவிகளும் தேடிவரும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் நட்பும் கிடைக்கப் பெறுவதால் உபரி நேரங்களில் யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் கடுமையாக உழைப்பார்கள். உழைப்பு இருமடங்கு லாபம் தரும். 

வியாபாரத்தைப் பெருக்க பல இடங்களுக்கும் பிரயாணம் செய்வீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளையும் செய்வீர்கள். சிலருக்கு பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபங்களும் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும். புதிய குத்தகைகளைப் பெறலாம். 

அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பெயரும் புகழும் உயரும். எதிரிகளின் பலம் குறையும். எதிர்பார்த்த பதவிகள் தேடிவரும். அரசாங்க அதிகாரிகளுடன் சுமுகமான உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு முகத்தில் பொலிவும் மலர்ச்சியும் காணப்படும். சிறிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு விருதுகளும் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடன்பிறந்தோர் வளம் காண்பார்கள். திடீர் பயணங்களும் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தரும். பணியில் உள்ள பெண்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். சிலருக்கு ரத்தசோகை நோய் உண்டாகலாம்.  மாணவமணிகள் கல்வி உயர்வுக்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்கு கல்வி கற்பதற்கான இடமாற்றமும் கிடைக்கும். சிறிய முயற்சிகளில் பெரிய வெற்றிகளை அடைவீர்கள். பெற்றோரிடம் கிடைக்கும் ஆதரவு உங்களை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராக இருந்தாலும் சிக்கனத்தைக் கடைபிடிப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவீர்கள். கற்பனை சக்தி கூடும். புதிய முதலீடுகளில் அறிவைத் துணைகொண்டு செய்து வெற்றி பெறுவீர்கள். சில எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடிவருவார்கள். உடல்வளம் மனவளத்தை மேம்படுத்த யோகா செய்வீர்கள். தாமதமாக நடந்து கொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். 

மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். குழந்தைகள் ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மனதை அழுத்திக்கொண்டிருந்த பிரச்னைகள் விலகும். வழக்குகளிலும் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத காரியங்களைப் பற்றி புரிந்துக்கொண்டு அதை விட்டுவிடுவீர்கள். 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். கூட்டாளிகளும் நண்பர்களும் நல்வழி காட்டுவார்கள். புதிய தொழில் முயற்சிகளும் நல்ல முறையில் கைகொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். குடும்பத்தாருடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். குழந்தைகளுக்கு மேற்படிப்புக்கு உயர்ந்த பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். பிடிவாதங்களைத் தளர்த்திக்கொண்டு சுமுகமான உறவை அனைவரிடமும் வைத்துக் கொள்வீர்கள். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். 

பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். செயல்களைச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றிச் செய்து வெற்றி பெறுவீர்கள். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டு செயலாற்றி வெற்றி இலக்குகளை எட்டுவீர்கள். தவறாகப் புரிந்துக்கொண்டிருந்த நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். சட்டப்பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளையும் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும் காலகட்டமாக அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகளின் சுமை சிறிது அதிகரித்தாலும் அவற்றை திட்டமிட்டும் மகிழ்ச்சியுடனும் செயல்படுத்தி எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெறுவார்கள். சிலருக்கு பணியிட மாற்றம் உண்டாகி குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியில் இருக்கவேண்டிய சூழ்நிலையும் உருவாகும். சிலர் பணிகளை சரிவர செய்யாமல் சிறிது சரிவுக்கு ஆளாவர். கவனமாக உழைத்து மேலதிகாரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியமாகும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் திருப்திகரமாக இருக்கும். 

வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கிவிடும். விட்டதைப் பிடிக்க முயற்சி செய்வீர்கள். கூட்டாளிகளிடம் ஆலோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம். செய்தொழிலில் சிறிது தடைகள் ஏற்பட்டாலும் எப்படியும் இலக்குகளை எட்டிவிடுவீர்கள். விவசாயிகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். நீர்வரத்து அதிகமாக காணப்படுமாகையால் தகுந்த நேரத்தில் விதைத்து வளமையை கூட்டிக்கொள்ளவும். விளைபொருள்களின் விற்பனை நன்றாக இருக்கும். கால்நடைகளால் விரும்பிய பலனைப் பெற முடியாமல் போகலாம். 

அரசியல்வாதிகள் மீது சில எதிர்கட்சியினர் அவதூறுகளை சுமத்த நினைப்பார்கள். இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையுடன் நிலைமைக்குத் தக்கவாறு நடந்துகொள்வது நல்லது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறிய தடைகளுக்குப்பிறகு நிறைவேறும். ரசிகர்களின் ஆதரவு இருக்கும். 

பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையாக இருக்க பழகிக் கொள்ளவும். மனதில் பட்டதை உடனுக்குடன் பேசுவதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் நடக்க வேண்டிய சுப நிகழ்ச்சிகளை நடத்தி உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்தைச் செலுத்தி அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். அதனால் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் விளையாடலாம். 

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வருமானத்தில் எந்த ஒரு குறையும் ஏற்படாது. புதிய வருமானத்திற்குரிய யுக்திகளைத் தேடுவீர்கள். மூடிவிடலாம் என்று நினைத்திருந்த தொழிலை மீண்டும் புதுப்பித்து நடத்தத் தொடங்குவீர்கள். அரசாங்கச் சலுகைகளைச் சிரமமின்றி பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடியே நிறைவேறும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தைகளின் கல்வி விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வீட்டிலும் வெளியிலும் பெயர், புகழ் உயரும். 

அனைவரும் நட்பு பாராட்டுவார்கள். நேர்முக மறைமுக எதிர்ப்பு என்று எதுவும் வராது. புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். சமுதாயத்தில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலிருந்தும் வருமானம் வரத்தொடங்கும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். அவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் பிஸியாகக் காணப்படுவீர்கள். வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்துமுடிக்கும் காலகட்டமாக அமைகிறது.

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நிரம்பக் கிடைக்கும். இதனால் அனைத்து காரியங்களும் பிரச்னை இன்றி முடிவடையும். அனைத்து விஷயங்களும் அனுகூலமாக நடைபெறும். மனதில் மகிழ்ச்சியும் குடும்பத்தில் குதூகலமும் காணப்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களை முழுமையாக அடைத்து விடுவீர்கள். எதையும் சிந்தித்து நிதானமாகப் பேசுவீர்கள். வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் ஒருமித்து அன்யோன்யமாகப் பழகுவீர்கள். 

சமுதாயத்தில் பெரியோர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். குழந்தைகளின் நலன் கருதி புதிய திட்டங்களை கையில் எடுப்பீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைக்கும். அரசாங்கத் தொடர்புகளில் சாதகமான பலன்களும் சலுகையும் கிடைக்கும். நீண்டகால நோய்கள் குணமாகும். குழந்தை இல்லாத வீட்டில் மழலைச் செல்வங்கள் கொஞ்சி விளையாடும். சிலர் புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வார்கள். பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். உங்கள் தைரியத்தை அனைவரும் பாராட்டுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலை சம்பந்தப்பட்ட பயணங்களால்  நன்மை உண்டாகும்.  உங்கள் தன்னம்பிக்கை கூடும். பதவி உயர்வு எதிர்பார்க்காமலேயே கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். புதிய விற்பனை யுக்திகளைப் புகுத்தி விற்பனையை பெருக்குவார்கள். 

வெளியில் கொடுத்திருந்த பணம் கைவந்து சேரும். புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். அகலக்கால் வைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவு கூடினாலும் தைரியத்திற்குக் குறைவு வராது. இதுதான் பராக்கிரம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மகிமை. செயல்கள் படிப்படியாக நல்ல பலன்களைக் கொடுக்கும். கால்நடைகளையும் நல்ல முறையில் பராமரிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். வழக்கு விவகாரங்களில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் சுமாராக இருந்தாலும் பணவரவு சீராகவே முன்போலவே இருக்கும். ரசிகர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவிலேயே இருக்கும். புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் அந்தஸ்து உயரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முதல் தரமான வெற்றியை காண்பார்கள். படிப்பில் முன்னேற்றகரமாக ஈடுபட்டு தேர்வில் வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

24.01.2020 வரை உள்ள காலகட்டத்தில் வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பல்வேறு பிரச்னைகளில் மாட்டிக் கொண்டு செல்லாக்காசு போல் இருந்தவர்கள் மதிப்பு கூடி பொலிவுக்கு மாறுவீர்கள். 

செல்வம் செல்வாக்கு இரண்டும் உயர்வைப் பெறும். செல்லுமிடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பைப் பெறுவீர்கள். குழந்தைகளின் கல்வி, திருமணம், வேலை ஆகியவை குறைவின்றி சுபமாக நடந்தேறும். ஏட்டளவில் இருந்த செயல்கள் இந்த காலகட்டத்தில் செயலளவில் நடைபெற ஆரம்பிக்கும். 

ஆன்மிகத்தில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வருமானத்தில் ஒரு பகுதியை தர்மகாரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். சேமிப்பும் சிறுக சிறுக உயரத்தொடங்கும். செய்தொழிலை விரிவு செய்ய சிறு பயணங்களை அடிக்கடி செய்ய நேரிடும். போட்டியாளர்கள் அடங்கி நடப்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சகஜ நிலை உருவாகும். 

கைநழுவிப்போன பொறுப்புகளை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். வீடு கட்டத் தொடங்கி பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் அதை கட்டி முடித்து கிரகபிரவேசமும் செய்வார்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்து மகிழ்ச்சியைக் கூட்டுவார்கள். சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் கேட்காமலேயே உதவிகளைச் செய்வீர்கள். 

25.01.2020 முதல் 18.09.2020 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் கவலைகள் யாவும் படிப்படியாக குறைந்து மகிழ்ச்சி நிறையத் தொடங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இதனால் வருமானமும் வரத் தொடங்கும். தள்ளி வைத்திருந்த பயணங்களையும் மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வகையில் இருந்த விரோதங்கள் மறைந்து உறவு மேம்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய கடன்களை வாங்கி அசையாச் சொத்துகள் வாங்குவீர்கள். உங்களை கண்டும்காணாமல் இருந்தவர்கள் வரவேற்று உபசரிப்பார்கள். 

செல்வாக்கும் உயரக் காண்பீர்கள். பேச்சு வார்த்தைகளில் எந்தக் குறைவும் இருக்காது. உங்களை விட உங்கள் குடும்பத்தினர் முன்னேற்றம் பெறுவர். செய்தொழில் சீராக இருந்தாலும் ஏதோ ஒருவகையில் அதற்கு புதிய மெருகு கொடுத்து நல்லவிதத்தில் மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். வாயு வாதம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இக்காலகட்டத்தில் உண்வு விஷயத்தில் கட்டுப்பாடாக இருப்பதும் தக்க மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வதும் அவசியமாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிக சுமை இருப்பதால் வேலையை மாற்றலாமா என்கிற எண்ணம் அவ்வப்போது  தோன்றும். உத்தியோகத்தை விட்டு விடக்கூடிய நிலைமை ஏற்படாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்கும். பொறுமையுடன் உழைப்பீர்கள். வருமானத்திற்கு எந்த குறைவும் இருக்காது. 

வியாபாரிகளுக்கு போட்டிகள் குறையும். வியாபாரத்தில் லாபத்தைக் காண்பீர்கள். நண்பர்களையும் வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். கடன்கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள்.  

அரசியல்வாதிகள் எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து விட்டுச் செயல்படுத்தவும். அவசரச் செயல்கள் அவப்பெயரை உண்டாக்கி விடலாம். வயதில் முதிர்ந்தவர்களையும் அனுபவஸ்தர்களையும் அனுசரித்து ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். கட்சி மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது  கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருப்பதால் புதிய வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும். முக்கிய முடிவுகளை உயர்ந்தோரைச் சந்தித்து எடுக்கவும். சக கலைஞர்களை பகைத்துக்கொள்ளாமல் இருக்கவும். 

பெண்மணிகள் தங்கள் கணவரின் பாராட்டுகளைப் பெறுவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவமணிகள் முயற்சிக்குத் தக்கவாறு மதிப்பெண்கள் பெறுவார்கள். வருங்கால கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். 

பரிகாரம்: பார்வதி, பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்) 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்களை விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com