நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் தை செவ்வாய் உத்ஸவத்தையொட்டி புஷ்பத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் சுவாமிகள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் செவ்வமுத்துக்குமாரசுவாமிக்கு நடைபெறும் தை செவ்வாய் உத்ஸவம் பிப்ரவரி 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின், முக்கிய நிகழ்வான புஷ்பத் தேரோட்டம் திங்கள்கிழமை (பிப். 11) நடைபெற்றது. இதையொட்டி, கிருத்திகை மண்டபத்தில் வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி எழுந்தருளியதும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் செல்வமுத்துக்குமார சுவாமி எழுந்தருளியதும், கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தார். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் பிற்பகலில் நிலையை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.