உத்தரமேரூர் சுந்தர வரதராஜர் கோயிலில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் தெப்போற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பல்வேறு பூக்களால் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு, மாட வீதி வழியாக உலா வந்த பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.
அதன் பின், கோயில் குளத்தில் வண்ண மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பெருமாள் (உற்சவர்) வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர்.