கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரம் கோயிலில் ராகு பெயர்ச்சியையொட்டி புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நவக்கிரகங்களில் முக்கியமானவரான திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.
ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகு பெயர்ச்சி எனப்படுகிறது. இதன்படி, நிகழாண்டில் புதன்கிழமை பிற்பகல் 1.24 மணிக்கு ராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதையொட்டி, கோயில் வளாகத்தில் புதன்கிழமை காலை பூர்ணாஹுதி நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்கள் மங்கள இசையுடன் புறப்பட்டு சன்னிதியை அடைந்தன. இதையடுத்து, ராகு பகவானுக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும், ராகு பெயர்ச்சியையொட்டி, ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, புதன்கிழமை இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து வியாழக்கிழமை (பிப்.14) முதல் 16-ம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.