திருச்செந்தூரில் இன்று மாசித் திருவிழா தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (பிப். 19) தேரோட்டம் நடைபெறுகிறது.
திருச்செந்தூரில் மாசித் திருவிழா 9ஆம் நாளான திங்கள்கிழமை காலையில் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.
திருச்செந்தூரில் மாசித் திருவிழா 9ஆம் நாளான திங்கள்கிழமை காலையில் வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (பிப். 19) தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற மாசித் திருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமியும் அம்மனும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏழாம் திருவிழாவை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை சுவாமி சண்முகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியும், எட்டாம் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் எழுந்தருளி வீதி உலா வந்து திங்கள்கிழமை அதிகாலையில் திருக்கோயில் சேர்ந்தார்.

தொடர்ந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த பெருமான் தனித்தனி வெள்ளிக் குதிரையில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டை வெளிமண்டபத்தில் திருக்கண் சாத்திய பின்னர், வீதி உலா வந்து மேலக்கோயில் சேர்ந்தனர். திங்கள்கிழமை ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு பகலில் பல்லக்கிலும், இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், தெய்வானை அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

இன்று தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் திருவீதி வலம் வந்து நிலையை அடையும். தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை மாலை முதலே பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கினர்.

தெப்பத் திருவிழா: பதினொன்றாம் திருவிழாவான புதன்கிழமை (பிப். 20) இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. மாலையில் சுவாமி யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி எழுந்தருளி, இரவு தெப்பக்குளம் நகரத்தார் மண்டகப்படி மண்டபத்திற்கு வந்து சேர்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றி வரும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. பிப். 21ஆம் தேதி, 12-ஆம் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா.பாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.கே.செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com