திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால உற்சவம், கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஜன.6-ஆம் தேதி) தொடங்கியது. காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் வேதமந்திரங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
உற்சவர், மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், விநாயகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் தங்ககொடி மரத்தின் அருகே எழுந்தருளினர். அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து 10 நாட்களும் பிரமோற்சவ விழா நடைபெறும். 10-வது நாள் அதாவது தை மாதம் 1-ந்தேதி (ஜனவரி 15-ந்தேதி) உத்தராயண புண்ணியகால பூஜையின் நிறைவு நாளாகும். அதைத் தொடர்ந்து, திருவூடல் மற்றும் மறுவூடல் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறும்.
சூரிய பகவான் தென் திசையில் இருந்து வட திசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயண புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய 6 மாதங்களும் உத்தராயண காலமாகும்.