ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு ஜன.31-ஆம் தேதி பூகர்ஷணம்(பூமி பூஜை) செய்ய உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு வரும் ஜன.31-ஆம் தேதி பூகர்ஷணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்று காலை 9.10 முதல் 9.40 மணி வரை வைகானச ஆகம விதிப்படி பூகர்ஷணம் செய்யப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்கிறார். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய வரும் பஜனை கோஷ்டியினருக்கு சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும். திருமலையில் கடைகள் மற்றும் நடைபாதை கடை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் உரிமம் குறித்த பிரச்னைகளை தீர்க்க அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கொண்ட துணைக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.