மலேசியா பத்து மலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருத்தலத்தில் தைப்பூச திருவிழா நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம். மற்ற மாதங்களில் வரும் பூச நட்சத்திரத்தைவிடத் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
காரணம் பல ஆன்மிக அற்புதங்கள் இந்நாளில் நிகழ்ந்திருக்கின்றன. முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் சிவபெருமானுக்கும் இந்த நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது மேலும் சிறப்பானது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலேசியாவில் நேற்றுபொது விடுமுறை அளிக்கப்பட்டது. மத வேற்றுமையின்றி அனைத்து மதத்தினரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் விழாவாகத் தை பூசம் விளங்குகிறது.
அலகு குத்துதல், பால், பன்னீர், புஷ்பம் என விதவிதமான முறையில் காவடி எடுத்து முருக பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். மலேசியாவில் விமரிசையாகக் கொண்டாடப்படும் விழாக்களில் தைப்பூசம் முக்கிய பங்கு வகிக்கின்றது.