திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை திருவாடிப்பூர உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இக்கோயிலில் எழுந்தருளி உள்ள ஆண்டாள் நாச்சியாருக்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தையொட்டி
இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை ஆண்டாள் நாச்சியாருக்கு திருவாடிப்பூர உற்சவம் நடைபெற உள்ளது. இந்த உற்சவ நாள்களில் ஆண்டாளுக்கு நாள்தோறும் காலையில் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை திருவீதிப் புறப்பாடும் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி கோவிந்தராஜர் கோயிலில் சக்கரத்தாழ்வார் சாத்துமுறை, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சாத்துமுறை உள்ளிட்டவை நடைபெறும். ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதியம் உற்சவர்கள் அலிபிரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். அதன் பின் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கோவிந்தராஜர் கோயிலை அடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.