திருமலை பெரிய ஜீயர் சாதுர்மாஸ்ய விரதத்தை தன் சீடர்களுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார்.
மகாவிஷ்ணு ஆடி மாத ஏகாதசி அன்று தொடங்கி ஐப்பசி ஏகாதசி வரை ஆழ்ந்த நித்திரையில் இருப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன.
எனவே இந்த நான்கு மாதங்களில் நாட்டில் உள்ள துறவிகள் தங்களுடைய ஸ்நானம், ஜபம், ஹோமம், விரதம், தானம் போன்றவற்றை உலக நன்மை வேண்டி செய்வர். இது புராண காலங்களிலிருந்து வரும் வழக்கமாகும். அதன்படி குரு பௌர்ணமிக்கு அடுத்து வரும் சுபமுகூர்த்த நாளில் சாதுர்மாஸ்ய விரத சங்கல்பத்தை துறவிகள் மேற்கொள்வர்.
இந்நிலையில், ராமாநுஜரின் வழி வந்த திருமலை பெரிய ஜீயர் சடகோப ராமாநுஜர் மற்றும் சின்ன ஜீயர் கோவிந்த ராமாநுஜர் ஆகிய இருவரும் தங்கள் சீடர்களுடன் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை தரிசித்து, சாதுர்மாஸ்ய தீட்சையை தொடங்கினர். அவர்களுக்கு ஏழுமலையானின் வஸ்திரம் போன்றவை பரிவட்டங்களாக கட்டப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.