வானியல், கணிதவியல் மற்றும் ஆன்மீகம் உள்ளடக்கியது வேத ஜோதிடம்!

இந்த பிரபஞ்ச சக்தியில் ஜோதிடம் என்பது வானியல் அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மீக
வானியல், கணிதவியல் மற்றும் ஆன்மீகம் உள்ளடக்கியது வேத ஜோதிடம்!


இந்த பிரபஞ்ச சக்தியில் ஜோதிடம் என்பது வானியல் அறிவியல், கணிதவியல் மற்றும் ஆன்மீக சார்ந்த உள்ளடங்கிய ஒன்று என்று கூறலாம். ஜோதிடம் எப்பொழுது பார்க்கப்பட்டது என்று பார்க்கும்பொழுது, நாடுகளின் படையெடுக்கும் நாள் குறிக்க, அரசரின் முடிசூட்டல் மற்றும் மருத்துவம் சார்ந்து விஷயங்களுக்கு ஜோதிடம்  பார்ப்பதுண்டு. பின்பு அரச குடும்பத்துக்காக மட்டும் ஜோதிடத்தை பயன்படுதியதாக கூறப்படுகிறது. அதுவே பிற்காலத்தில் நம் மக்கள் அனைவராலும் பின்பற்றினர்.  

இந்தியாவைப் பொறுத்தவரை விண்ணில் உள்ள நட்சத்திரம், ராசி மண்டலங்களைக் கொண்டு ஜோதிடம் சொல்லப்பட்டது. பின்பு தனி மனித பிறப்பு ஜாதகம் கொண்டு  எதிர்கால பலன்கள் பார்க்கப்படும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. ஜோதிடர்களுக்கு வழிகாட்டியாகப் பழமையான ஜோதிடப் பாடல்களும், வெண்பாக்களும், சித்தர்களின் நூல்கள்,   வடநாட்டு ஜோதிட நூல்களும் உறுதுணையாக உதவுகிறது. மேலும் அவரவருக்கென்று ஜோதிட குருக்கள் இருக்கின்றனர். அவர்களின் வழியாக ஜோதிட அறிவு பெறுகிறோம்
வேத ஜோதிடம் என்பது ஐந்தாம் வேதாங்கமாகவும் முதன்மையாவதுமாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தில் ஒருசில பிரிவுகள் மூலம் பலன் அளிக்கப்படுகிறது அவை ஆருடம்,  வாஸ்து, கிளி ஜோதிடம், நாடி, கைரேகை, எண் ஜோதிடம், பெயர் ஜோதிடம், கே.பி ஜோதிடம், மரபணு (DNA) ஜோதிடம் மற்றும் இன்னும் பல இக்காலத்தில் வளர்ந்து  கொண்டு வருகிறது. இவற்றில் சங்க இலக்கியத்தில் அரண்மனை அமைக்க மனையடி சாஸ்திர விதியை நாடினர். எடுத்துக்காட்டாக மனையடி சாஸ்திர முறை பற்றிய  விவரம் நெடுநல்வாடையில் கூறப்பட்டுள்ளது.

விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம்,

இரு கோல் குறிநிலை வழுக்காது, குடக்கு ஏர்பு,

ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 

நூல் அறி புலவர் நுண்ணீதின் கயிறு இட்டு,

தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,

பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப, மனை வகுத்து

(நெடுநல்வாடை)

சூரியன் எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தினையுடையது. அச்சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒரு பக்கம் நிழல் சாராத வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல் மாறுபடாது நிற்கின்ற நண்பகல் பொழுதில் (இது சித்திரை மாதம் 10ம் நாளுக்கு மேல் 20ம் நாளுக்குள் நிகழும் என்பர்) கட்டடக்கலை பற்றிய  நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில் கொண்டு, பெரிய புகழினையுடைய  மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அரண்மனை என்று வாஸ்து ஜோதிட முறையினை அக்காலத்திலே விதைக்கப்பட்டது.

ஆதார பூர்வ நூல்கள்

ஆதவன்பங் கயன் வேத வியாசன் பாரா  சரனும்

அத்திரிரோ  மகன்வசிட்டன் அணிமரிசி தானும் 

போதபௌ லகன்யவனன் சௌனன்மனு பிருகு 

புகழ்சனகன் ஆங்கீரன் காசிபன்கார்க் கியனும் 

ஓதியரா ரதன்முதல்ஈர் ஒன்பதின்மர் கூடி 

உரைசெய்த நான்கிலக்கத்   தைம்பதினா யிரமாம்  

நீதிபெறும் ஜோதிடத்தில் தெரிந்தெடுத்த உண்மை 

நிறைந்தபொருள் தனைக்கருத்தில் நினைந்துமிகத் தானே  

(ஜாதக அலங்காரம்)

கடவுளின் கட்டளைப்படி சூரியன், பிரம்மா, வியாசர், பராசர், அத்ரி, உரோமசர், வசிஷ்டர், மரீசி, மெய்யறிவு வாய்க்கப்பெற்ற பௌலகர், யவனர், சௌனகர், மனு, பிருகு,  கீர்த்தமிக்க ஜனகர், ஆங்கீரசர், காசிபர், கார்க்கியர் மற்றும் மேம்படுத்திக் கூறப்பட்ட தேவ ரிஷி நாரதர் ஆகிய 18 ரிஷி முனிவர்கள் இயற்றிய 4,50,000 ஸ்லோகங்களுடைய  ஜோதிட சாஸ்திரத்தின் முக்கிய மூல நூல்கள் மூலம் உலகிற்குத் தெரியப்பட்டது. பின்பு ஜோதிடம் அனைத்து குருமார்களிடம் சாஸ்திர முறைப்படி கற்பிக்கப்பட்டது.

இலக்கிய காலத்தில் முழு வளர்ச்சி அடைந்தது ஜோதிட அறிஞர்களால் பல புத்தகங்கள் வெளியிட்டான் அவைகளில் பழமையானது வராகமிகிரர் எழுதிய பஞ்ச  சித்தந்திகா, பிருஹத் சம்ஹிதை, பிருஹத் ஜாதகம், பிருஹத் யாத்திரை, லஹு ஜாதகம், பிருஹத் விவாஹ படலம் மற்றும் ஸ்ரீ பிருதுயஜஸ் ரிஷியின் ஹோரா சாரம்,  ஹோரா ஷட்பந்நாசிகா, யவனேஸ்வரின் யவன ஜாதகம், கணித மேதை பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோமணி, கரணகுதூகலம் கல்யாண வர்மமரின் சாராவளியை  மற்றும் பல வடமொழியில் (ஹோரசாரம், சாராவளி, பராசாரியம், சந்தான தீபம், பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், சம்பு நாதம்)  நூல்கள்   இயற்றபட்டன. கி.பி 12-ம் நூற்றாண்டுக்குப்பின் கணிதம் மற்றும் வானவியலை, வாஸ்து, சாமுத்ரிகா லட்சணம், கைரேகை, பிரஸ்னம், எனும் தனிதனி பிரிவுகள் கூடிய 100க்கு மேல் நூட்பாக்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது கீரனூர் நடராஜனின் சாதக அலங்காரம், மங்களேஸ்வரியம், வீமகவி ஜோதிடம், சாதக சூடாமணி,  சினேந்திரமாலை, தாண்டவமாலை, சாதக சிந்தாமணி, சந்திர காவியம், ஆனந்த களிப்பு, புலிப்பாணி ஜோதிடம், மற்றும் அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால்  இயற்றப்பட்ட ஆயிரக்கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன.     

உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்கள் ஜோதிடம் கூறும் வழிகளில் நகர்கின்றன. ஜோதிடத்தை கிரேக்கர்கள், பாபிலோனியர்கள் அராபியர், எகிப்தியர், யாதா, பாரசீக,   சீனர்கள் மற்றும் பல மேலை நாடுகளில் ஆராய்ச்சி மூலம் பயனடைவதாகக் கூறப்படுகிறது.

வானவியல் அறிவியல் சார்ந்த ஜோதிடம் 

ஜோதிடம் என்பது வானியல் ரீதியாக கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கூறுவது. ஜோதிடம் கொஞ்சம் கணிதவியல் மற்றும்  அறிவியல் மார்க்கமாகச் சென்றால் நம் பலன்களை அருமையாகக் கணிக்க முடியும் என்பது நம் முன்னோர்கள் கருத்து. எடுத்துக்காட்டாக வானியல் சாஸ்திரத்தை  அடிப்படையாகக் கொண்ட அறிவியல் சார்ந்தது தான் நம் வேத கால ஜோதிடம் தொன்றுதொட்டு வளர்த்துக்கொண்டு வருகிறது. ஜோதிடத்தில் வானியல் சார்ந்ததது  என்பதற்கு சித்தாந்தம், ஹோர ஸ்கந்தம், சம்ஹிதை ஜாதகம் என்பன கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.  முக்கியமானது மேலும் பூமியையும் சூரியனையும் சந்திரன் சுற்றுவதால் ஏற்படும் இரு புள்ளிகளும் (ராகு & கேது) உள்ளன என்பது நம் ஜோதிடத்திற்கு அடிப்படை  வானியல் சாஸ்திரம்.   

பூமி மற்றும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான சந்திரன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் கோள்கள் இயக்கத்தைப் பற்றிய விவரம் இன்றைய  விஞ்ஞானிகளால் செயற்கைக் கோள்கள் அனுப்பிக் கண்டுபிடிக்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் அன்றே பலவித வானவியல் சார்ந்த இதனைக் கணிதச்  சமன்பாடுகளால் ஏற்கனவே கணித்துச் சொல்லி விட்டார்கள் முக்கிய ஆராய்ச்சியாளர்கள் வராஹமிகிரர், ஆர்யபட்டா, பாஸ்கராச்சாரியா விவரமாகக் கூறியுள்ளனர்.

இந்த பிரபஞ்சமானது  பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம் கொஞ்சமாக ஜோதிட அறிவியல் விரிந்து பரவ தொடங்கியது. கி.பி.499ம் ஆண்டு கணிதம், வானியல்,  ஜோதிடம், போன்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவர் ஆரியப்பட்டர். இவரே சூரிய சந்திர கிரகணம் ஏற்படுவதைப் பற்றியும் மற்றும் பூமி உருண்டை வடிவிலானது என்றும் அது  தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன்முதலில் அறிவித்தவர் ஆரியபட்டரேயாவார்.  

ஜோதிடக் கலையில் சிறந்த புலமையுடையவராகவும் வராஹமிகிரர் திகழ்ந்தார். அவரது படைப்பான பிருகத்ஜாதகம் மற்றும் பிருகத்சம்ஹிதை இலக்கியத்தில் - வானவியல்,  ஜோதிட கலை, கட்டிடக்கலை பற்றியும் வானிநிலை இயக்கம் பற்றியும், மணமுறைகள், சகுனங்கள் என பல்வேறு தலைப்புகள் இவர் விவரித்துள்ளார். ஜோதிடம் என்பது அறிவியல் சார்ந்தது என்பதற்கு உதாரணமாக செவ்வாய் தோஷம் உள்ளவர்க்கு ரத்த அணுக்கள் மாறுபட்டிருக்கும் என்பதும் மரபுக்கூறுகளின் அடிப்படையில் பிரித்து திருமணப்பொருத்தம் மற்றும் தோஷ சாமியம் பார்த்து ஆண் -  பெண் இருவரையும் திருமணப் பந்தத்தில் சேர்த்து வைக்கப்படுவார்கள்.    

மற்றொரு எடுத்துக்காட்டாக ஜோதிட முறைப்படி குழந்தை இல்லாதவர்கள் ஈரப் புடவையுடன் உயர்ந்த மரமான அரச மரத்தைச் சுற்றும் பொழுது அதில் வரும் ஒருவித நல்ல  வாயுவானது உடலில் முக்கியமாக வயிற்றில் படும்பொழுது கருப்பை மற்றும் விந்தணுக்கள் பலம் பெரும் என்பது அறிவியல் சார்ந்த உண்மை.

சித்த ஜோதிடம்
  
உருத்திரன் என்றழைக்கப்பட்ட சிவனே முதல் சிறந்த சித்த மருத்துவனாக ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிடம் அறிந்த சித்தர்கள், ரிஷிகள், என் குருவான  பெரியவா வரை மருத்துவ தொண்டினை மக்களுக்கு செய்து வந்தார்கள். ஜோதிட சாஸ்திர  அடிப்படியில் பல்வேறு நூல்களிலும் துல்லியமாகக் கணித்துக் கூறியுள்ளனர்.  அகத்தியர் தான் சித்தர்களின் தலைவர் என்று கூறலாம். இவருடைய வைத்தியத்திற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  பல நோய்களுக்கும் தீர்வு காணப்பட்டது. அகத்தியர் நிறைய நூல்களை எழுதியுள்ளார் முக்கியமாக அறிவியல் ரீதியாக அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றிக் கூறியுள்ளார்.

பண்டைய மருத்துவத்தில் முக்கிய அங்கமாகிய ஜோதிடக்கலை,  மருத்துவ முறைகளிலும், பஞ்சபூத தத்துவபடியான கிரக நிலை மற்றும் கோள்களின் ஆதிக்கம் மாறும்போது உடலிலும் வாத பித்த கப மாறுபாடு அடிப்படையாகவும், உடம்பின் இன்னென்ன பகுதிகள் பாதிக்கப்படும் என்ற தத்துவத்தை அவர்கள் கணக்கிட்டு, அந்த  அடிப்படையில் வைத்தியம் செய்ய இயற்கை மூலிகை மூலம், உலோகமும், ரத்தினக்கற்கள் மற்றும் ரசவாத முறைப்படி மருந்து தயாரிக்கப்பட்டது. இப்படி அவர்களுடைய  வைத்திய முறை இயற்கையின் சக்திகளை ஒட்டியதாகவே அமைந்திருந்தது. அந்த காலங்களில் சித்தர்கள்  உடலினை எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட  மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய மண்டலங்கள் அடிப்படையில்  பிரித்து அதற்கேற்ப மருத்துவம் கொடுத்தனர். 

இந்த பிரபஞ்சத்தில் ஐம்பூதங்களான மண், காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் இவற்றின் பிரதிபலிப்பு ஒவ்வொரு உயிரிலும் நிறைந்துள்ளது அவற்றின் சக்திகள் அனைத்தும்  மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளிலும் நிறைந்துள்ளது என்பதால் திருமூலர் ஊண் உடம்பே ஆலயம் என்றார். அவற்றையே சித்தர்கள் கீழே குறிப்பிட்டமாதிரி  பாடியுள்ளார்கள்.         

அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம் 

அண்டமும் பிண்டமு மொன்றே 

அறிந்து தான் பார்க்கும் போதே 

அதாவது பிரபஞ்சத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்தில் அதாவது உடம்பில் உள்ளது. அதாவது  பிரபஞ்ச சக்தியானது உடலில் கரு உற்பத்திக்கு முக்கிய காரணமாகிறது  சுக்கிலமும் சுரோனிதமும் இணையும்போது, காற்று நீர், நெருப்பு மூன்றும் சேர்ந்து மண் உருவு கொண்டு உடலாய் மாறி உயிர் சேர்ந்து வாதம், பித்தம், கபம் என  நிலைப்படுகின்றது. இவ்வாறு பஞ்ச பூதங்களுள் அடங்கிய உடலானது உலகில் உள்ள தாவர மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரபஞ்ச சக்தி என்று   சித்தர்கள் கூற்று. இந்த மனித உடலில் உள்ள சூரிய சக்தியானது மனிதனின்  இதயத்துடன் தொடர்புடையது என்றும், மூளை நரம்புகள் அனைத்தும் சந்திரனோடு தொடர்பு  உடையவை என்றும், பித்தப்பை இரத்தம், செவ்வாயோடு தொடர்பு உடையவை என்றும் உடலைப்  பிரபஞ்சத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
பழங்காலத்திலே அக்கால மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையைப் பயன்படுத்தியுள்ளனர் . போர்க் காலங்களில் போர்வீரர்களுக்கு ஏற்படுகின்ற விழுப்புண் பெரிய  அளவிலிருந்தால் அப்புண்ணை மருந்துகள் வைத்துச் சேர்த்துத் தைக்கப்பட்டன என்று விழுப்புண்ணைத் தைக்கும் முறையைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது.

"கூறுவேன் தேகமது என்னவென்றால் 

குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி 

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு 

வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே

(திருமூலர் )

திருமூலர் தன் பாடல் மூலம் உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல்  என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

சித்தர்கள் மருந்துகளை மற்றும் அவற்றினை உட்கொள்ளும் முறையினை ஜோதிட உதவியுடன் செயல்பட்டனர். இன்றும் சிலர் ஜாதக கட்டம் கொண்டு தான் மருத்துவம்  செய்கின்றனர். நம் நாட்டில் இந்த ஜோதிடகலை முறைப்படி அனைத்து பல்கலைக்கழக வாயிலாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் முக்கியமாக வேத ஜோதிட பாடத்தினை வானியல், அறிவியல் ரீதியாக சீராகக் கற்றுக்கொடுத்தால் வருங்காலத்தில் உள்ளவர்கள் சரியான முறையில் அறிவியல் ஜோதிடம் கற்று மக்களுக்கு இந்திய  மருத்துவரீதியாக உதவுவார்கள். 

குருவே சரணம்

ஜோதிட சிரோன்மணி தேவி

Whatsapp: 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com