எது முதலில் உருவாகிறது? உடலா, உயிரா?

உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது.
எது முதலில் உருவாகிறது? உடலா, உயிரா?

உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. 

ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது. இப்படிப்பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்" என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

"சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்

இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று

தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி

யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்

சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று

பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல

ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த

நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்"

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும்.

இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன்  சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போலத் தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

"முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்

பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி

யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்

ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே."

- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். 

இரண்டாவது மாதத்தில் பிடரி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். 

மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.

அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார். ஆக, கருவானது மூன்று மாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத் துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த  தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. 

உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்குக் கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு  கூற வேண்டிய ஒன்று.

"ஆன்ம ஞானத்தை அடையச் சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

- கோவை பாலகிருஷ்ணன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com