ஒரு ஜாதகர் பெறும் சொத்து பற்றி அறிய சதுர்தாம்சம் எனும் D-4 சக்கரம் - (பகுதி 2)

பொதுவாகவே இந்த சதுர்தாம்சம் எனும் D-4 சக்கரத்தை யாரும் பார்ப்பதில்லை. இது ஒரு முக்கியமான சக்கரம் ஆகும். 
ஒரு ஜாதகர் பெறும் சொத்து பற்றி அறிய சதுர்தாம்சம் எனும் D-4 சக்கரம் - (பகுதி 2)

பொதுவாகவே இந்த சதுர்தாம்சம் எனும் D-4 சக்கரத்தை யாரும் பார்ப்பதில்லை. இது ஒரு முக்கியமான சக்கரம் ஆகும். இந்த சக்கரம் மூலம் என்ன காணலாம் என்றால், ஒருவர் பெறும் சொத்து, சுய சம்பாத்தியத்தில் பெறப்படுமா அல்லது பூர்வீகம் மூலம் அடைய முடியுமா அல்லது அதன் மூலம் லாபம் அடைய முடியுமா என அறியலாம். முதலில் ஒருவரின் D-1 எனும் ராசி கட்டத்தில், லக்கின அதிபதி, நான்காம் வீடு, நான்காம் அதிபதி மற்றும் நான்காம் வீட்டுக் காரக கிரகம் ஆன செவ்வாய் இவைகளை ஆராய வேண்டும். இவைகள் மட்டுமே ஒருவர் பெறும் சொத்து அதாவது சொந்த உழைப்பில் பெறும் சொத்தா, பூர்வீக சொத்தா அல்லது இவைகளின் மூலம் பெறும் லாபம்  போன்றவற்றைக் காணலாம். 

அதன் பிறகு D-4 சக்கரத்துக்கு சென்று அங்கும் அதே போல் லக்கின அதிபதி, நான்காம் அதிபதி மற்றும் நான்காம் காரகர் செவ்வாய் இவற்றின் பலம் அறிந்து பின் ஒரு ஜாதகர் பெறமுடியும் சொத்தினைப் பற்றி விரிவாகக் காணமுடியும். செவ்வாய், நிலத்திற்குக் காரகர் ஆவார். அதன் மேல் எழும்பும் கட்டடத்திற்கு சனி கிரகமே காரகர் ஆவார். இவர்களின் இணைவுகளாலே மட்டுமே ஒருவருக்குக் கட்டடம் எனும் சொத்து பற்றிக் காண இயலும். 

4ஆம் வீடு பலத்தை வைத்தே அவரின் சொந்த நிலத்தில் அல்லது சொந்தமாக்கப்பட்ட நிலத்தில், ஒருவர் வீடு கட்ட முடியுமா என காண முடியும். ஆனால் இந்த நான்காம் இடத்திற்கு, 9-ஆம் இடம் அல்லது அதிபதி போன்ற தொடர்பு பெறும் பொது அந்த ஜாதகர் பிறந்த இடத்தை விட்டு வெகு தொலைவில் வீடு கட்டுவார் எனலாம். அதுவே 12 ஆம் வீடு எந்த வகையிலாவது தொடர்பு பெறுமே ஆயின் அவர் வெளிநாட்டில் மட்டுமே சொத்தை அடையமுடியும் என்பது புலனாகும். இதன் படி ஒருவர் வெளிநாட்டில் சொத்து வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோ என்பது 4ஆம் வீட்டுடன் 12 ஆம் வீடு தொடர்பு கொண்டால் மட்டுமே உருவாகும். 

ஒருவர் ஜாதகத்தில், 4-ஆம் அதிபரும், 8-ஆம் அதிபர் மற்றும் 11-ஆம் அதிபரும் எந்த வகையிலாவது தொடர்பு பெறுவார்களே ஆனால், அந்த ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் அவரின் தாய்வழி அல்லது தந்தை வழி பூர்வீக சொத்தை அடைவார். ஒருவரின் ஜாதகத்தில், செவ்வாய், சனியால் பாதிப்படைந்தோ அல்லது சனி செவ்வாய் பார்வை பெற்றோ அல்லது செவ்வாய், சனி பரிவர்த்தனை பெற்றோ இருப்பின், அந்த ஜாதகர் எந்த நேரத்திலாவது வீடு கட்டும் யோகத்தினை அடைவார் என்றே கூறலாம். எவருடைய ஜாதகத்திலாவது சனி, செவ்வாய் தொடர்பு பெற்றிருப்பர் ஆனால், அவரால் வீடு கட்டுவது என்பது தவிர்க்க இயலாதது ஆகும்.

D-4 சக்கரத்தில், லக்கின அதிபதி, நான்காம் அதிபதி மற்றும் நான்காம் இடத்துக் காரக கிரகமான செவ்வாய் தொடர்பு பெற்றிருப்பின் ஒரு ஜாதகர் நிச்சயம் வீடு நிலம் போன்ற சொத்தை அடைவார். அவற்றை எந்த இடத்தில் என்பதை அதனோடு பாதிப்பை ஏற்படுத்தும் கிரகங்களைக் கொண்டே அறிய முடியும். 

மேற்படி கூட்டில், புதன் பாதிப்படைந்திருப்பின் ஒருவரால் வணிக வளாகத்தை கட்ட முடியும். அதுவே சூரியன் பாதிப்படையுமே ஆனால், அரசு வாடகை கட்டிடங்களிலோ அல்லது வெளிநாட்டு தூதுவர் வீட்டுக்கு அருகாமையில் அல்லது அரசு கட்டிடங்களில் வசிக்க முடியும். 

ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பாதிப்பு அடைந்திருந்தால், அவர் நீர் நிலைக்கு அருகாமையில் சொத்து பெற்று வசிக்க நேரிடும். ஒருவரின் ஜாதகத்தில் லக்கின அதிபதி வர்கோத்தமம் அடைந்திருந்தால், அவர் வாழ் நாள் முழுவதும் ஏதாவது ஒரு வீட்டை கட்டிக்கொண்டே இருப்பார். 

D-4 சக்கரம், நான்காம் அதிபதி, நான்காம் காரக கிரகமான செவ்வாய் உடன் சரியாக தொடர்பு பெறாமல் இருப்பின், ஒருவரால் சொத்து பெறுவதென்பது இயலாததாகும். அப்படியே ஏதாவது ஒரு நிலையில் சொத்து பெற்றிருப்பர். ஆனாலும், அவருக்கு அதன் மூலம் மகிழ்வையோ, லாபத்தையோ, அதிர்ஷ்டத்தையோ பெறுவதென்பது முடியாதது. 

சாயியைப் பணிவோம், அனைத்து செல்வமும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com