திருத்தணி முருகன் மலைக்கோயில் நுழைவு வாயிலில் உள்ள கோபுரக் கலசம் காணாமல் போன தகவல் அறிந்து பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இக்கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகனைத் தரிசிக்கின்றனர். முருகன் கோயிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு மலைப்பாதையும், பக்தர்கள் நடந்து செல்வதற்கு 365 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான பக்தர்கள் மலைப்படிகள் வழியாக நடந்து மாடவீதிக்கு சென்று, அங்கிருந்து மூலவரைத் தரிசிக்கச் செல்கின்றனர்.
படிக்கட்டுகள் வழியாக நடந்து வரும்போது, மலைக்கோயில் மாடவீதி நுழைவு வாயிலில் ஒரு காளிகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் மீது மூன்று கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. படிகள் வழியாகச் செல்லும் பக்தர்கள் நுழைவு வாயில் கோபுரக் கலசங்களைப் பார்த்து வணங்கிவிட்டு மாடவீதிக்குச் சென்று, அங்கிருந்து மூலவரைத் தரிசிக்கச் செல்வர்.
இந்நிலையில், கடந்த பத்து நாள்களுக்கு முன் நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் மீது இருந்த மூன்று கலசங்களில் ஒரு கலசத்தை திடீரென்று காணவில்லை. இதனால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், கோபுரத்தில் உள்ள சிலைகளும் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. புதிய கலசத்தைப் பொருத்தி பழுதடைந்த சிலைகளைச் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.