ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் வெகு விமரிசையாகத் தொடங்கியது.
ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று நிறைவடையும் வகையில் இந்த உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
ஏழுமலையானின் உற்சவரான மலையப்பர், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்கு தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த தங்கக் கவசம் ஆண்டிற்கு ஒருமுறை அகற்றப்பட்டு, செப்பனிடப்பட்டு மீண்டும் உற்சவர்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இந்தச் சடங்கை ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தையொட்டி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி திருமலையில் வெள்ளிக்கிழமை ஜேஷ்டாபிஷேகம் தொடங்கியது. கவசம் களையப்பட்ட உற்சவர்களின் முன்னிலையில் யாகம் வளர்த்து அர்ச்சகர்கள் ஸ்நபன திருமஞ்சனத்தை நடத்தி வைத்தனர்.
இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன்பின் உற்சவர்களுக்கு வைரக் கவசம் அணிவிக்கப்பட்டது. பிறகு ஊஞ்சல் சேவை கண்டருளிய உற்சவர்கள் மாட வீதியில் வலம் வந்தனர். ஆண்டுக்கு ஒரு முறை இந்த நாளில் மட்டுமே உற்சவர்கள் வைரக் கவசம் அணிந்தபடி மாட வீதியில் வலம் வருவது வழக்கம். இதைக் காண மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர்.