திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் நிறைவையொட்டி, பிரம்ம தீர்த்தக் குளத்தில் தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி சனிக்கிழமை
நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவம் கொடியேற்றம் முதல் 18 நாள்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வந்தது. தெப்ப உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை செண்பக தியாகராஜசுவாமி எழுந்தருளி இடையனுக்கு காட்சியளித்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு மேல் நடராஜர் அனுக்கிரஹ தீர்த்தவாரி நடைபெற்றது.
தொடர்ந்து, விசாக தீர்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை மற்றும் விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர் மயில் வாகனத்திலும், சண்டிகேசுவரர் சிறிய ரிஷப வாகனத்திலும் பிரம்ம தீர்த்தக் குள தீர்த்த மண்டபத்துக்கு எழுந்தருளினர்.
பிரம்ம தீர்த்தக் குளம் ரூ.2 கோடி மதிப்பில் படிக்கட்டுகள் புதிதாக அமைத்து, தீர்த்த மண்டபம் கட்டப்பட்டு புதிதாக தண்ணீர் கடந்த வாரம் விடப்பட்டிருந்தது. இந்தத் தீர்த்தக் குளத்தில் ஆச்சாரிய ரக்ஷ்ôபந்தனம் செய்தவர் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தீர்த்த புஜைகள் செய்தார்.
பின்னர் அஸ்திர தேவருடன் பக்தர்கள் நீராடல் (ஸ்நானம்) செய்த பின், சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இரவு ரிஷபக் கொடியிறக்கம் (துவஜா அவரோஹணம்) செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
முன்னதாக, தீர்த்தவாரியில் கோயில் நிர்வாக அதிகாரி ஜெ.சுந்தர், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணைப் பிரதிநிதி கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.