திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாள் காலை திருத்தேரில் பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் கடந்த 13ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 8ஆம் நாளான வியாழக்கிழமை காலை பிரசன்ன வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் மாடவீதியில் திருத்தேரில் வலம் வந்தார். தேரை பக்தர்களும் அதிகாரிகளும் வடம் பிடித்து இழுத்தனர்.
அதன் பின் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டன. இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் வலம் வருவதைக் காண மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர். அவர்கள் வாகனச் சேவைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். இந்த நிகழ்வில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகனச் சேவையின் முன் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.