சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஆசியாவிலேயே மிக உயரமான 145 அடி முருகன் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மலேஷியாவில் பத்துமலை என்னும் இடத்தில் 140 அடி உயரமுள்ள முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சேலம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் புத்திர கவுண்ட பாளையத்தில் 126 அடி உயர முருகன் சிலை பீடத்துடன் சேர்த்து 145 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. மலேஷியாவில் உள்ள முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி தியாகராஜன் குழுவினரே இந்த முருகன் சிலையையும் வடிவமைத்து வருகின்றனர்.
ஆத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீதர் என்பவர் தனது சொந்த செலவில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்துள்ளார். மலேஷியாவில் உள்ள முருகனை விடச் சற்று உயரமாக இந்த முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. உலகளவில் உயரமான இந்த முருகன் சிலை அமைக்கும் பணி 2020-க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.