கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி வீற்றிருக்கும் சித் சபை எதிரே அமைந்துள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் உற்சவ ஆச்சாரியார் பி.நடராஜ ரத்னசபாபதி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா நடைபெறும் 10 நாள்களிலும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
உற்சவ விவரம்: ஜூன் 30-ஆம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், ஜூலை 1-ஆம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 2-ஆம் தேதி வெள்ளி பூத வாகனத்திலும், 3-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும் (தெருவடைச்சான்), 4-ஆம் தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 5-ஆம் தேதி தங்க கைலாச வாகனத்திலும் சந்திரசேகரர் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. 6-ஆம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவில், ஜூலை 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
8-ஆம் தேதி (திங்கள்கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 9-ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் விழா முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் எஸ்.கே.பாலகணேச தீட்சிதர், துணைச் செயலர் சு.வை.நவமணி தீட்சிதர் ஆகியோர் செய்து வருகின்றனர்.