திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கோயிலில் அனுமந்த வாகனத்தில் கோதண்டராமராக கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார்.
சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலையில், ராமருக்கு தாசனாக விளங்கிய அனுமந்தனின் வாகனத்தில் கோதண்டராமராக கையில் வில் ஏந்தி கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின் மதியம் உற்சவமூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு கல்யாண மண்டபத்தில் வசந்தோற்சவமும் நடத்தப்பட்டன. பின்னர் மாலை 5 முதல் 6 மணி வரை தங்கத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கல்யாண வெங்கடேஸ்வரர் மாடவீதியில் வலம் வந்தார்.
பெண்கள் திரண்டு தங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 7 மணிக்கு ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் மாடவீதியில் கல்யாண வெங்கடேஸ்வரர் வலம் வந்தார். இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.