ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை உற்சவர்களுக்கு திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 9-ஆம் நாளான வியாழக்கிழமை ஆனந்தராத்திரியாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் அருகில் உள்ள கல்யாண மண்டபத்தில் காளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானபிரசூனாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதைக் காண பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்கள் அந்த மண்டபத்தில் கூடி இறைவன் - இறைவிக்கு கல்யாண சீர்வரிசைகளைப் படைத்தனர். அதன்பின் கோயிலில் பதிவு செய்து கொண்ட ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர்.
அதன்பின் காலையில் உற்சவர்கள் திருமணக் கோலத்தில் கல்யாண மண்டபத்திலிருந்து ஊர்வலமாக ருத்ராட்ச அம்பாரி வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து, கோயிலுக்குள் சென்றனர். அங்கு அவர்களுக்கு மதியம் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு கோயிலுக்குள் நடராஜ அம்சமான சபாபதிக்கு கல்யாண உற்சவம் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளையும் கோயில் வளாகத்தில் ஆடல், பாடல், நாமசங்கீர்த்தனம், பஜனைகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
காளஹஸ்தீஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தம்பதி சமேதராய் சென்று காளஹஸ்தி கோயில் அதிகாரிகளிடம் அதைச் சமர்ப்பித்தார்.