மதுரை கள்ளழகர் கோயிலில் வரும் 18-ம் தேதி பங்குனி மாத திருக்கல்யாணம் தொடங்குகிறது.
108 வைணவ தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்த விழாவானது வருகிற 18-ம் தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகத் திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் விழா நடைபெறுகிறது.
22-ம் தேதி மஞ்சள் நீர் சாற்றுமுறையுடன் இந்த திருவிழா நிறைவுபெறுகிறது. திருக்கல்யாண திருவிழாவைக் காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.