திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மார்ச்20-ல் பங்குனி தேரோட்டம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் பங்குனி தேரோட்டத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் மார்ச் 20-ல் பங்குனி தேரோட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு இதற்கான கொடியேற்ற நிகழ்வு காலை 6 மணிக்கு பூர்வாங்க பூஜைகள், கணபதி ஹோமம், ரிஷப யாகம் உள்ளிட்ட பூஜைகளை கோயில் சிவாச்சாரியர்கள் செய்து, கோயில் கொடிமரத்தில் பிரம்மபுரீஸ்வரர் படம் பொருந்திய கொடியை ஏற்றினர்.
இதைத் தொடர்ந்து 2-ம் நாளில் சுவாமி பூத வாகனம், மயில் வாகனத்திலும், 3-ம் நாள் கைலாச மற்றும் அன்னவாகனத்திலும், 4-ம் நாள் சேஷ மற்றும் மயில் வாகனத்திலும், 5-ம் நாள் தனித்தனி வாகனங்களில் பஞ்சமூர்த்தி புறப்பாடும், 6- ம் நாள் யானை வாகனம் மற்றும் புஷ்ப பல்லக்கிலும், 7-ம் நாள் கற்பக விருட்சம் மற்றும் காமதேனு வாகனத்திலும், 8-ம் நாள் குதிரை வாகனப் பல்லக்கிலும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
முக்கிய நிகழ்வான 9-ம் நாள் வரும் 20-ம் தேதி பங்குனித் தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் முத்துராமன், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.