பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.2 கோடிக்கும் கூடுதலாக இருந்தது.
கோயில் உண்டியல்கள் கடந்த 27 நாள்களில் நிரம்பியதைத் தொடர்ந்து புதன்கிழமை திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.
கல்லூரி மாணவிகள், திருக்கோயில் அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கம் ரூ. 2 கோடியே 5 லட்சத்து 34 ஆயிரத்து 90 இருந்தது.
வேல், பட்டை, தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு என 1,101 கிராம் தங்கம், பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் என 15 ஆயிரத்து 720 கிராம் வெள்ளி இருந்தன.
மேலும் மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 1,412 கரன்சிகளும் இருந்தன.
இவை தவிர பித்தளை வேல், கைக் கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளும் இருந்தன.
நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.