கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியில் திருப்பதி கோயில் அமைக்கப்பட்டு கடந்த ஜன. 27-இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள்கள் நிறைவடைந்ததை அடுத்து மண்டலாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுப்ரபாத தரிசனம், தொடர்ந்து யாகம், ஹோமம், பூர்ணாஹுதி, சிறப்பு அபிஷேகம், வெள்ளி அங்கி சாத்தி அலங்கார பூஜை ஆகியன நடைபெற்றன. பிற்பகல் 12 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாலையில் தோமாலை சேவை, இரவில் அலங்கார தீபாராதனை, சுவாமி பள்ளியறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகியன நடைபெற்றன.
இதில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சேஷாத்ரி, திருமலை திருப்பதி தேவஸ்தான சென்னை உள்ளூர் கமிட்டித் தலைவர் ஸ்ரீகிருஷ்ணா, வள்ளலார் பேரவைத் தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.