பங்குனிப் பெருவிழாவையொட்டி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள கற்பகாம்மாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் பங்குனிப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த 11 - ஆம் தேதி கிராம தேவதையான கோலவிழி அம்மனுக்கு சிறப்புப் பூஜை நடத்திய பிறகு, கொடியேற்றத்துடன் பங்குனிப் பெருவிழா தொடங்கியது. இந்த விழா வரும் 20 - ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
திருத்தேரில், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். அதன்பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோயில் தேரை வடம்பிடித்து இழுத்துச்செல்வார்கள்.
மேளதாளம், நாதஸ்வரம் மற்றும் பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கு இடையே திருத்தேர் நான்கு மாடவீதிகளிலும் வலம்வரும்.
அதைத் தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறும். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அறுபத்து மூவர் திருவிழா நடைபெறும்.
தொடர்ந்து, 20-ஆம் தேதி, தீர்த்தவாரி உற்சவமும், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடும் நடைபெற உள்ளது. அன்று மாலை திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
இதையொட்டி, காவல் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.