வாலாஜாப்பேட்டையில் சுமார் 800 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 25-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து ரத வீதிகள் வழியாக வலம் வந்து மாலையில் கோயில் நிலையை தேர் அடைந்தது. விழாவில் வாலாஜாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, வாலாஜாப்பேட்டை போலீஸார் போக்குவரத்தை மாற்றியமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.