திருமுருகன் பூண்டியில் 25 தலை, 50 கைகளுடன் செதுக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மகா சதாசிவ மூர்த்தி சிலை சிவகங்கை மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
திருப்பூரை அடுத்த திருமுகன்பூண்டி சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைக் கூடங்கள் உள்ளன. அங்குச் செதுக்கப்படும் சிலைகள் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தற்போது அங்குள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் 25 தலை 50 கைகளுடன் கூடிய மகா சதாசிவ மூர்த்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது. மேலும், 11 தலைகள் கொண்ட சுப்பிரமணிய சாமி சிலையையும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இரு சிலைகளும் கடந்த ஆறு மாத காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இரு சிலைகளையும் சிவகங்கை - சொக்கநாத புரத்தில் உள்ள பிரத்தியங்கர தேவி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.