காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை உத்திரப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் சித்திரை உத்திரப் பெருவிழா கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் பூதம், நாகம், நந்தி, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது. திருக்கயிலைக் காட்சி, திருக்கல்யாணம், மகாரதம், வெள்ளித் தேர், ஊஞ்சல் சேவை, சங்காபிஷேகம், தீர்த்தவாரி, நடராஜர் தரிசனம், முருக்கடி சேவை உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெற்றது. அப்போது உற்சவர் ராஜவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தொடர்ந்து, 17 நாள்கள் விமரிசையாக நடைபெற்ற இவ்விழாவின் நிறைவாக செவ்வாய்க்கிழமை புஷ்பப் பல்லக்கு உற்சவம் நடைபெற்றது. அப்போது, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.