திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜர் மாட வீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது . 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8.30 மணி வரை சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்த கோவிந்தராஜ சுவாமியை மாட வீதியில் கூடியிருந்த பக்தர்கள் வணங்கினர்.
அதன்பின், மதியம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலையில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது.
இரவு 8 மணிக்கு அன்னப் பறவை வாகனத்தில் சரஸ்வதி அவதாரத்தில் வீணையை கையில் ஏந்தி கோவிந்தராஜ சுவாமி, மாடவீதியில் வலம் வந்தார்.
ஆயிரக்கணகான பக்தர்கள் வாகன சேவையைக் கண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கோயில் எதிரில் உள்ள திருக்குளக்கரையில் மாலை வேளையில் கதாகாலட்சேபம், பக்திப் பாடல்கள், ஹரிகதை, ஆடல், பாடல் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வாகன சேவைக்கு முன் ஜீயர்கள் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனர். வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.