திருமலையில் நடந்து வரும் பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை குதிரை வாகனத்தில் மலையப்பர் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
ஏழுமலையான் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொண்ட வைபவத்தை தேவஸ்தானம் ஆண்டுதோறும் திருமலையில் நடத்தி வருகிறது. அதன்படி பத்மாவதி பரிணய உற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது.
அதன் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை மலையப்பர் குதிரை வாகனத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் பல்லக்கிலும் கல்யாண மண்டபத்தை அடைந்தனர்.
அங்கு அவர்களுக்கு சிறப்பு ஆராதனைகள், பட்டு வஸ்திரம் சமர்ப்பணம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
அதன்பின் இரவு உற்சவமூர்த்திகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் திருமலை ஜீயர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதையொட்டி ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்தது.