திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வியாழக்கிழமை மாலை அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை (மே 17) முதல் தொடர்ந்து 3 நாள்களுக்கு, கோடை வெப்பத்தைத் தணிக்கும் நோக்கில் வசந்தோற்சவம் நடத்தப்பட உள்ளது. நாள்தோறும் மதிய வேளையில் பத்மாவதி தாயார் வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு அங்கு பலவித நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். வசந்தோற்சவம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற வேண்டி அதற்கு முந்தைய நாளில் அங்குரார்ப்பணம் எனப்படும் நவதானியங்களை முளைவிடும் சடங்கு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி வியாழக்கிழமை மாலை சேனாதிபதி விஸ்வக்சேனர் தலைமையில் அர்ச்சகர்கள் குழு கோயில் அருகில் உள்ள நந்தவனத்திற்கு சென்று மண் பாலிகைகளில் புற்று மண்ணை எடுத்து வந்தனர்.
அதை கோயில் மண்டபத்தில் கொட்டி அதில் பூதேவியின் உருவத்தை வரைந்தனர். பூதேவி உருவத்தின் வயிற்றுப்பகுதியிலிருந்து மண் எடுத்து அதை பாலிகைகளில் வைத்து அவற்றில் நவதானியங்களை முளைவிட்டனர். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.