பித்ரு தோஷம் - ஒரு சிறப்புப் பார்வை!

மிகுந்த ஆன்மீக எண்ணம் கொண்ட, இறை பக்தி மேலிட்ட தம்பதியர் ஒருநாள் என்னைப் பார்க்க வந்தனர்.
பித்ரு தோஷம் - ஒரு சிறப்புப் பார்வை!

(கட்டுரை பெரிய அளவில் இருப்பதாகக் கருதி படிக்கத் தவறாதீர்கள்)

மிகுந்த ஆன்மீக எண்ணம் கொண்ட, இறை பக்தி மேலிட்ட தம்பதியர் ஒருநாள் என்னைப் பார்க்க வந்தனர். அவர்களின் மகனின் ஜாதகத்தை காண்பித்து அவனுக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை, மேலும் அனைத்தும் கூடிவந்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் அது தடைப்படுவதாகவும் கூறினர். மேலும் அவர்களின் குடும்பத்தில் நிம்மதி ஏதாவது ஒரு வகையில் குலைவதாகவும் கூறினர். அந்த ஜாதகத்தை பார்த்ததும் அதில் பித்ரு தோஷம் இருப்பதைக் கண்டேன். அதனை விளக்கிய போது அந்த தம்பதியினர் சரியாக பித்ரு கர்மா அவரின் பெற்றோர்கள் காலத்திலேயே அவர்களின் மூதாதையினரின் கர்மாக்களை சரிவரச் செய்யாதது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து இந்த ஜாதகரின் தந்தையும் கர்த்தாக்களைச் சரிவரச் செய்யாதது தெரியவந்தது. அந்த ஜாதகரின் தந்தையின் ஜாதகத்திலும் பித்ரு தோஷம் குறி காண்பிக்கப்பட்டிருந்ததைத் தெரிவித்தேன். 

அவர்களின் வீட்டில் உள்ள மற்றைய குழந்தைகளின் ஜாதகத்திலும் அந்த தோஷம் குறி காண்பிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக் காட்டினேன். மேலும் அந்த பித்ரு தோஷமானது 7-வது தலைமுறை வரை தொடரும் என்பதும் அதனை ஏதாவது ஒரு தலைமுறையினர் சரியான பரிகாரம் செய்து முடித்திருப்பாரே ஆனால், அவரோடு அந்த தோஷம் முடிவுக்கு வந்து அவரின் அடுத்த வாரிசுகளுக்கு அந்த தோஷம் தொடராமல் போகும் என்பதை விளக்கினேன்.  

மேலும், அந்த தோஷத்திற்கான அறிகுறிகள் அவரின் அடுத்த வாரிசுகளுக்கு அவர்களின் ஜாதகத்தில் காண்பிப்பதில்லை, என்பதனையும் தெளிவுபடுத்தினேன். 

1. பித்ரு தோஷம் என்றால் என்ன?

பித்ரு என்பது, ஒரு ஜாதகரின் தந்தை அல்லது அவரின் மூதாதையர்களைக் குறிக்கும். பித்ரு தோஷம் என்பது, தந்தை அல்லது தந்தை வழி மூதாதையர் செய்த கெட்ட / பாவச் செயல்கள் அல்லது அவர்கள் வாழும் காலத்தில் செய்த தவறான செய்கைகளே அவர்களின் சந்ததிகளைத் தாக்கச்செய்யும். எப்படி ஒருவரின் தேடிவைத்த சொத்துக்கள் அவரின் சந்ததியினரை சென்று அடைகிறதோ அதுபோலவே அவரின் கர்ம வினைகளும் அவரின் சந்ததியினரை வந்தடையும். மூதாதையினரின் சொத்துக்கு போட்டிபோட்டு, பூலோக கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து பெறவிழைகிறோம், அதுபோலவே இந்த கர்ம பலனை இறைவனின் நீதிமன்றம் நாம் கோராமலே அதற்கான பங்கை அது அளித்துவிடுகிறது. 

அதுவே எச்சரிப்பது போல ஒருவரின் ஜாதகத்தில் குறியாக வந்து நிற்கிறது. மூதாதையர்கள் செய்த தீவினைகளின் தண்டனைகளை எளிமையாக, ஜபம், பூஜை, ஹோமம், தேவையானவர்களுக்கு சேவை செய்தல், அன்னதானம் செய்தல், வறுமையில் உள்ளவர்களுக்கு பணமோ / பொருளோ அளித்து உதவுதல் போன்றவற்றை செய்து பித்ரு தோஷத்திலிருந்து தப்பலாம் என்பதை தப்பு கணக்கு போட்டு விடமுடியாது. 

2. பித்ரு தோஷம் வரக்காரணமான செயல்கள் / குற்றங்கள் என்னென்ன?

1) கொடூரச் செயலை செய்வது / ஏமாற்றுவது / சித்திரவதை செய்வது / கொலை செய்வது போன்றவற்றை தாமாக நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாக தமது பங்களிப்பைச் செய்வது.

2) தமக்கு சொந்தமில்லாத எந்த பொருளையும், தன் வசப்படுத்திக்கொள்வது, கட்டாயப்படுத்தி அதனை அடைவது, கொள்ளையடிப்பது அல்லது ஏமாற்றுவது, போன்றவற்றை நேர்மை அற்ற முறையிலோ அல்லது சட்டத்துக்குப் புறம்பாகவோ அடைவது.

3) உண்மைத் தன்மையை அறியாமலும் கெட்ட எண்ணத்துடனும் புரளியைப் பேசுவது. 

4). ஒற்றுமையாக இருந்த ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் பிரித்தாண்டு, குடும்ப அமைப்பைச் சீர்குலைப்பது. 

5) உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலினத் தொல்லை ரீதியாகவோ, ஒரு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்துச் சீரழிப்பது.

3. பித்ரு தோஷ வகைகள் எத்தனை?

தோஷம் என்பது எவ்வாறு உண்டாகிறது என்பதனை முதலில் அறிதல் நன்று. முதலில் மற்றவருக்கு நாம் செய்யும் செயல்களால் / பேசும் பேச்சால் அவர்களுக்கு ஏற்படும் கோபம், அது நாளடைவில் தொடருகையில் சாபமாகும். பின்னர் அதுவே தோஷமாகி சந்ததியினரைத் தொல்லை பெறச் செய்யும். 

1. ஒருவரின் குடும்ப அங்கத்தினர்களால் அடிப்படைத் தேவையான ஆண்டு சடங்குகளை, அவர் குடும்பத்தில் பிரிந்த ஆன்மாக்களுக்குச் செய்யாததால், உருவாகும் சாபங்களினால் ஏற்படும் தோஷம். 

2. குடும்பத்தினர் அல்லாத மற்றவர்களுக்கு, நாமோ அல்லது நமது குடும்பத்தினர்களில் இருப்பவர் அல்லது மறைந்த ஆத்மாக்களால், பாதிப்பு ஏற்படும்படி நடந்துகொண்ட செயல்கள்.

3. வயதானவர்களை கவனிக்காமல் அவர்களை தனியே இருத்தி அவர்களுக்கு உடல் மற்றும் மனத்தால் தாங்கொணா வலி ஏற்படுத்தும் செயல்களால். இந்த மூன்றுமே தான் பித்ரு சாபங்களாகி தோஷமாக மாறுபவையாகும். 

4. பித்ரு தோஷத்தின் பாதிப்புகள் என்னென்ன?

1. திருமண கால தாமதம் அல்லது தடையை உருவாக்கும். 

2. திருமண வாழ்வைக் கவிழ்த்து விடும். (SCUTTLE)

3. ஒரே குடும்பத்தில் திருமணம் வெற்றி பெறாமலும் தோல்வி கொண்டதுமான நபர்கள் இருப்பர்.

4. ஒரே குடும்பத்தில், திருமணமே ஆகாத ஆண்களும், பெண்களும் இருப்பர். 

5. குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாமல் போகலாம். 

6. தாய்மைப் பேருக்கு காத்திருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். 

7. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஊனம் உற்றவர்கள் / சவாலானவர்கள் (PHYSICALLY / MENTALLY CHALLENGED) இருக்கலாம். 

8. எதிர்பாராத துர்மரணங்கள் ஏற்படலாம். 

9. வீட்டில் கொள்ளை சம்பவமோ / தீப்பிடித்து எறிதல் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.

10. தீராத வாட்டியெடுக்கும் வறுமை, எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் தீராத கடன் தொல்லைகள்.

5. ஜாதகத்தில், பித்ரு தோஷத்தை அறிவது எவ்வாறு?

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 

* பித்ரு காரகரான சூரியன் , ராகுவுடன் 5  ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இணைந்திருப்பது.

* ராகு தனித்து 5  ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இருப்பது,

* மேலும் சூரியன் / தேய்பிறை சந்திரன் / செவ்வாய் / புதன் / ராகு மற்றும் கேது , 5-ஆம் வீட்டில் இருப்பது.

* 5 ஆம் வீட்டு அதிபன் நீச்சம் அடைந்தோ அல்லது வலிமை குன்றியோ இருப்பது. 

* 5 ஆம் வீட்டு அதிபன் பாவியுடன் இணைந்தோ அல்லது பாவி வீட்டில் இருப்பதோ,

* நீச்சம் பெற்ற கிரகங்கள் 5 ஆம் வீட்டிலோ அல்லது 9 ஆம் வீட்டிலோ இருப்பது. 

* 5 ஆம் வீட்டு அதிபன் நவாம்சத்தில் வலிமை குன்றி இருப்பது. 

* 5 ஆம் வீட்டு அதிபதி திதி சூனிய ராசியால் பாதிப்பது.

இவை ஒரு சிலவே, இதிலும் சில இயற்கை சுபர் அல்லது லக்கின சுபரால் தொடர்பு ஏற்படுகையில் தோஷமற்று போக வாய்ப்புள்ளது. அருகில் உள்ள, சரியான ஜோதிடரை நாடி அறிந்து கொள்வது நன்மை பயக்கும். 

6. பித்ரு தோஷ நிவாரணம் / பரிகாரம் என்னென்ன?

* ஆதித்ய ஹ்ருதய மந்திரம் சொல்லுதல் அல்லது அதனை வீட்டில் ஒலிக்கச்  செய்தல் ஓரளவு நன்மை பயக்கும்.

* பிரதி அமாவாசை, பெரியோர்கள் / மூத்தோர்கள் , உயிர் நீத்த நாளில் உண்டான திதியில் பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்தால் நலம் பயக்கும்.

* அரச மரக்கன்றை சிரவண (ஆவணி) மாதத்தில் நட்டுவைத்தால் நல்லது. 

* சிவ லிங்கத்திற்கு வில்வ பத்திரத்தை, சோமவார தினத்தில் அர்ச்சித்து, சமர்ப்பித்தல் 

* தேவையானவருக்கு அன்னமும், வஸ்திரமும் அளித்தால் நன்மை பயக்கும். 

* முடிந்தவர்கள், ருத்திராஷ்ட மந்திரத்தை கேட்கவோ, சொல்லவோ செய்தல் பித்ரு தோஷத்தின் வீரியம் குறைவதோடு நன்மையையும் அடைவார்கள். 

* முடிந்தபோது ஒரே ஒரு முறை, ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி, அங்கு கடற்கரை மணலில் சிவனை லிங்க வடிவில் உரு அமைத்து பலவித திரவியங்களால் அபிஷேகம் செய்து பூஜித்து மறுபடி கடலில் நீராடி, பின்னர் நாழிக்கிணற்றின் நீரைத் தெளித்துக்கொண்டு இராமர் வழிபாடு செய்த ராமநாத ஈஸ்வரரை வணங்கி வந்தால், பித்ரு சாபம் நீங்கும். இதனைப் பெரிய சாஸ்திரீய முறைப்படி செய்வதும் உசிதம் தான். கடற்கரையில் தர்ப்பணம் செய்வதற்கு ஏராளமான சாஸ்தோத்திரமான பண்டிட்கள் இருப்பார்கள், அவர்கள் மூலமாகவும் தோஷ நிவர்த்தி செய்யலாம். 

7. மேற்கூறிய ஏதேனும் ஒரு தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்த பின்னர், தடங்களான காரியம் நிறைவேறுவதையும், பிள்ளைப் பேறு பெற்றவர்களையும் காணமுடிகிறது. சிலருக்கு தாமதமும் ஆகிறது. அப்படிப் பட்டவர்கள் அருகில் உள்ள சரியான அனுபவம் வாய்ந்த ஜோதிடர்களை அணுகி, தோஷ நிவர்த்தி பெறலாம்.

சாயியை பணிவோம் அணைத்து நலன்களும், வளங்களும் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா தையூர். சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com