வரதர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை வரதர் பவனி வந்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17}ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 19}இல் கருடசேவையும், 23}இல் திருத்தேர் உற்சவமும் விமரிசையாக நடைபெற்றன. நாள்தோறும் தங்க சப்பரம், சேஷன், ஹனுமந்தர், ஹம்சம், சிம்மம், யானை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை பிற்பகலில் வரதர் தொட்டித் திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து, மாலை வேளையில் வரதர் குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளில் பவனி வந்தார். பின்னர், ஏகாம்பரநாதர் கோயில் தெருவில் ஏசல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து, ராஜவீதிகளில் பவனி வந்து வரதர், கோயிலை வந்தடைந்தார்.
இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் மாட வீதிகளிலும், ராஜவீதிகளில் நின்றபடி கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.