கும்பகோணம் அருகே நாதன்கோவிலில் ஜெகந்நாத பெருமாள் கோயில் வைகாசி பெருவிழாவையொட்டி, திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளில் நாற்பதில் நடுநாயகமாகத் திகழ்வது நந்திபுர விண்ணகரம் என்கிற நாதன்கோவில் சேத்திரம். இது நந்திக்கு சாப விமோசனம் கொடுத்த புராணத் தலம் என்ற சிறப்பும் உடையது. நந்தி பெயரிலேயே தீர்த்தம் உடைய சிறப்பு பெற்ற தலம்.
இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பெரு விழா 10 நாட்கள் நடைபெறும். இதன்படி, நிகழாண்டில் மே 18-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, நாள்தோறும் உள் பிரகார புறப்பாடு, திருமஞ்சனம், நாலாயிர திவ்ய பிரபந்த சேவை உள்ளிட்டவை நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர். இதைத் தொடர்ந்து மாலை புஷ்பக யாகம் நடைபெற்றது.