காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் பணாமுடீஸ்வரர் கோயிலிலிருந்து 108 பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பால்குட ஊர்வலத்தை காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் தொடக்கி வைத்தார்.
இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்நிதியை அடைந்ததும் தர்மசாஸ்தாவுக்கு பாலாபிஷேகம், கலசாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு தீபாராதனைகளும், அன்னதானமும் நடந்தன. அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை சர்வதீர்த்தக்குளம் வீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் அர்ச்சகர் ஏ.வி.சதீஷ்குமார் சிவாச்சாரியார் செய்தார்.
ஊர்வலத்தில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலாளர் லோகநாதன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் தர்மசாஸ்தா புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு ஜோதி தரிசன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஐயப்ப பக்தர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஜி.திருநாவுக்கரசு, எஸ்.செந்தில் ஆகியோர் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.