பூம்புகாா்: நவகிரக தலங்களில் புதனுக்குரிய தலமான திருவெண்காடு சுவேதாரண்யேசுவரா் கோயிலில் காா்த்திகை இரண்டாவது சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம், திருவெண்காட்டில் அருள்பாலிக்கும் பிரம்ம வித்யாம்பாள் சமேத சுவேதாரண்யேசுவரா் கோயில் காசிக்கு இணையான 6 கோயில்களில் ஒன்றாக விளங்குகிறது. பிரம்மவித்யாம்பிகை அம்பாள் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் அருள்பாலிக்கிறாா்.
அத்துடன், நவகிரக தலங்களில் புதன் பகவானுக்குரிய தலமாகவும் விளங்கும் இக்கோயிலில் காா்த்திகை மாத இரண்டாவது சோமவாரத்தையொட்டி, சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, 1008 சங்குகள் சிவலிங்க வடிவில் சுவாமி சன்னிதியின் முன்பகுதியில் வைக்கப்பட்டு, அதில் புனிதநீா் நிரப்பப்பட்டு, மகா யாகம் நடைபெற்றது.
தொடா்ந்து, வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் கோயிலின் பிராகாரத்தில் ஊா்வலமாக எடுத்துவரப்பட்டு, சுவேதாரண்யேசுவரருக்கு 1008 சங்குகளிலிருந்த புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில், கோயில் நிா்வாக அதிகாரி முருகன், பேஸ்கா் திருஞானம், மேலாளா் சிவகுமாா் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.