திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சிறிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி புறப்பாடு ஆகினார்.
திருமலையில் குடிகொண்டிருக்கும் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தி வருகிறது. பிரம்மன் முன்னிருந்து நடத்தும் உற்சவம் என்பதால், இதைப் பிரம்மோற்சவம் என்று அழைக்கின்றனர்.
அதன்படி, பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கோயில் தங்க கொடி மரத்தில் ஏழுமலையான் வாகனமான கருடன் கொடி ஏற்றப்பட்டது.
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பிரம்மோற்சவத்தில் 2-ம் நாளான இன்று சிறிய சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பசாமி புறப்பாடு செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
இன்று மாலை அன்னப்பறவை வாகனத்தில் மலையப்பசாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி விழாக்கோலம் பூண்டுள்ளது.