திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை காலை கல்பவிருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி ராஜமன்னார் அவதாரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதியில் வலம் வந்தார்.
விழாவையொட்டி, காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற வீதியுலாவை பக்தர்கள் மாடவீதியில் அமர்ந்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். கல்பவிருட்ச வாகனத்தில் வலம் வரும் எம்பெருமானை தரிசிப்பவர்கள் மனதில் எண்ணிய அனைத்தையும் பெருமான் அருள்வார் என்பது ஐதீகம்.
ஸ்நபன திருமஞ்சனம்
பிரம்மோற்சவ நாள்களில், மாடவீதியில் வலம் வரும் எம்பெருமானின் களைப்பைப் போக்க மதியம் 2 மணி முதல் 4 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கோயிலுக்குள் உள்ள மண்டபத்தில் பால், தயிர், இளநீர், தேன், பழச்சாறு, மஞ்சள், சந்தனம், செஞ்சந்தனம் உள்ளிட்ட பொருள்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன்பின், மாலை உற்சவ மூர்த்திகள் மாட வீதியில் எழுந்தருளும் முன் 1,008 விளக்குகளுக்கு இடையில் கொலு விருந்து ஊஞ்சல் சேவை கண்டருளினர். ஊஞ்சல்சேவையின்போது, வேதகோஷங்கள், அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன.
சர்வ பூபால வாகனம்
இரவு 8 மணி முதல் 10 மணி வரை சர்வத்துக்கும் தலைவனான எம்பெருமான் அனைத்துக்கும் நாயகனாக தங்கத்தால் ஆன சர்வபூபால வாகனத்தில் மாட வீதியில் தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் வந்தார். சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளிய அவரைக் காண பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர். வாகன சேவையில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயர்கள் குழு நாலாயிர திவ்யப்பிரபந்த பாடல்களை பாடி வந்தனர். அதுபோல் கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.