திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான இன்று காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 30-ம் தேதி தொடங்கியது. தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வந்தார்.
பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான நேற்று பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி இன்று காலை நடைபெற்றது. அதிகாலை பல்லக்கு உற்சவமும், அதைத்தொடர்ந்து வராக புஷ்கரணியில் சக்கரஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. ஜீயர்கள் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி அபிஷேகம் செய்தனர். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தவாரி முடிந்ததும் தெப்பத்தில் புனித நீராடினர்.
இன்று இரவு திருச்சிவிகை எனப்படும் பல்லக்கில் பெருமாள் உபநாச்சியார் திருவீதி உலா நடைபெற்ற பின்னர் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடைந்து கொடியிறக்கப்படுகிறது.