காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டை மகாலிங்க நகரில் உள்ள வரசித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
வரசித்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.
இதனையடுத்து புதிதாக ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக செய்யப்பட்டிருந்த நவகிரஹ சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை மாலை முதலாம் கால யாகசாலை பூஜைகளும், புதன்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு, திருக்கோயில் ராஜ கோபுர கலசத்தில் புனித நீர் வார்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, வரசித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், விசேஷ தீபாராதனைகளும் நடந்தன. மதியம் ஆலய வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், நசரத்பேட்டை, மகாலிங்க நகர், முருகுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.