இன்று முதல் மஹாளய பக்ஷம் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு தினமும் முன்னோர்களை வழிபடுவது நன்மையைத் தரும்.
மஹாளயபட்சம் பதினைந்து நாட்களும் எப்படி இருக்கவேண்டும்? என்று தெரிந்துகொள்வோம்.
ஒவ்வொருவரும் நமது வீட்டை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் சண்டை போடுவது, தகாத சொற்களைப் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, ஆபாசமான படங்களைப் பார்த்தல், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றைப் படித்தல், புலால் உண்ணுதல், கள், மது குடித்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
நாம் எந்த அளவிற்குத் தூய்மையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குச் சுத்தமாக இருக்கிறோமோ, எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கிறோமோ, எந்த அளவிற்குப் பித்ருக்களைச் சிரத்தையுடன் பூஜிக்கிறோமோ அந்த அளவிற்கு இந்தப் பதினைந்து நாட்களும் நம்முடன் தங்கியிருக்கும் நம் பித்ருக்கள், மனமகிழ்ச்சியையும், மனநிறைவையும் அடைகிறார்கள்.
பித்ருக்கள் இவ்விதம் இந்தப் பதினைந்து நாட்களும் நாம் குடும்பம் நடத்தும் நேர்மையைக் கண்டு மனத் திருப்தி அடைவதன் பலனைப் பித்ரு தேவதைகள் அவர்களிடம் பெற்று நம்மிடம் சேர்க்கிறார்கள்.