திருமலையில் விரைவில் 100 சதவீத பணமில்லா பரிமாற்ற முறை அமல்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்துக்கான முன்னேற்பாடுகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட அவர் மேலும் கூறியது: திருமலையில் பக்தர்களின் வசதிக்காக வாடகை அறை முன்பதிவு செய்யும் கவுன்ட்டர்களில் கடந்த 2 வாரங்களாக ஸ்வைப்பிங் இயந்திரம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
பணமில்லா பரிமாற்ற முறையை அமல்படுத்தும் நோக்கில், இந்த வசதிகள் செய்யப்பட்டது. அதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யாமல் இலவசமாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஸ்ரீபத்மாவதி வாடகை அறைகள் வளாகத்தில் 72 சதவீதமும், மத்திய விசாரணை மையத்தில் 40 சதவீதமும் பணமில்லா பரிமாற்ற முறை மூலம் பக்தர்கள் வாடகை அறைகளை முன்பதிவு செய்து கொண்டனர்.
விரைவில் 100 சதவீதம் பணமில்லா பரிமாற்ற முறையை அமல்படுத்தி வெளிப்படையாக தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை அனைவரும் அறியும் வண்ணம் சேவைகள் வழங்கப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பெட்டக வசதியை நிர்வகிக்க புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பக்தர்கள் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பு பெட்டக வசதியை இணையதளம் மூலம் முன்பதிவுசெய்து கொள்ளலாம். முன்பதிவை ரத்து செய்பவர்களுக்கு உடனுக்குடன் அவர்கள் செலுத்திய முன்பணம் திருப்பி அளிக்கப்படும்.
அதேபோல் திருமலையிலும் இன்னும் 10 நாள்களுக்குள் முன்பணத்தை திருப்பி அனுப்பும் வசதி உருவாக்கப்படும்.
திருமலையில் உள்ள எஸ்.வி. அருங்காட்சியகத்தில் ஏழுமலையான் கோயில் குறித்த 3 டி இமேஜிங் வரும் செப். 30-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதேபோல் அருங்காட்சியகத்தின் முதல் பிரிவில் நன்கொடையாளர்களின் உதவியுடன் ஏழுமலையானின் ஆபரணங்கள் குறித்த 3 டி வடிவமைப்பு படங்கள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.