உலக நன்மை வேண்டி திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம்

நான்கு வேதங்களுக்கு இணையாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் உருவான திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே திருமீயச்சூரில் பிரசித்தி பெற்ற லலிதாம்பாள் உடனுறை மேகநாதசுவாமி திருக்கோயிலில் உலக நன்மை
உலக நன்மை வேண்டி திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் நெய்க்குள தரிசனம்

நான்கு வேதங்களுக்கு இணையாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் உருவான திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே திருமீயச்சூரில் பிரசித்தி பெற்ற லலிதாம்பாள் உடனுறை மேகநாதசுவாமி திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி சனிக்கிழமை ஏகதின லட்சார்ச்சனை மற்றும் நெய்க்குளத் தரிசனம் மிகச் சிறப்பாக நடந்தது.  இதில் நூற்றுக்கணக்கான லலிதாம்பிகை உபாசகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு நெய்க்குளத்தில் பிம்பமான அம்பாளை தரிசனம் செய்தனர்.

இறைவனும், இறைவியும் ஒருசேர அருள் வழங்கும் அற்புதத் திருத்தலம் என்பதோடு, சமயக்குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் அகத்தியரால்  பாடல்பெற்ற சிறப்பு வாய்ந்த இத் தலத்தில், லலிதாம்பிகை தன்னுடைய திருமுகத்திலிருந்து உருவான வாக்தேவதை, வசினி தேவதைகளைக் கொண்டே, தன்னைக் குறித்த சகஸ்ரநாமத்தை பாடச் செய்து, ஹயக்ரீவர் மூலம் அகத்தியருக்கு உபதேசம் அளித்த சிறப்பினைப் பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. 

நான்கு வேதங்களுக்கு இணையான லலிதா சகஸ்ரநாமம், அகத்திய முனிவர் மூலம் உலகிற்குத் தெரியவந்தது. லலிதா சகஸ்ரநாமத்தில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை. வாழ்வில் பதினாறு பேறுகளையும் பெற லலிதா சகஸ்ரநாமம் பாராயணமே மிகச்சிறந்த உபாயம். லலிதா சகஸ்ர நாமத்தை ஒரு முறை பாராயணம் செய்தாலே அதற்கும் பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

உயிர்கள் அனைத்தும் ஆதிபராசக்தியான அன்னை லலிதாம்பிகையின் அருளாலேயே உய்வு பெறுகின்றன என்ற அடிப்படையில், இக்கோயிலில் உலக நன்மைக்காக அன்னையின் திருவருளைப் பிரார்த்தித்து ஏகதின லட்சார்ச்சனை நடத்தப்பட்டது.  

முன்னதாக சனிக்கிழமை காலையில் 8 மணிக்குத் தொடங்கிய லட்சார்ச்சனை 10 ஆவர்த்திகளாக நடைபெற்று இரவு 8 மணிஅளவில் நிறைவடைந்தது.  

இதைத்தொடர்ந்து, அன்னை லலிதாம்பிகைக்கு அன்னப்படையல் வைபவம் (நெய்க்குளத் தரிசனம்) மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது.   300 கிலோ புளியோதரை, தயிர் சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலில் நெய் ஊற்றி, நெய்க்குளம் உருவாக்கி, அதில் கருவறையில் வீற்றிருக்கும் அம்பாளின் பிம்பத்தை விழச்செய்து தரிசனம் காட்டப்பட்டது. 

இதன் மூலம் அம்பாள் மனம் மகிழ்ந்து, பக்தர்களின் வாழ்வு சிறக்க நல்லாசி வழங்குகிறாள் என்பது ஐதீகம். இதனால் திரளானோர் நெய்க்குளத் தரிசன நிகழ்ச்சியில் பங்கேற்று, தரிசனம் செய்தனர். பின்னர், இந்த அன்னப்படையல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.  

முன்னதாக, வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர், பரம்பரை தர்மகர்த்தா ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய  சுவாமிகள் இத் திருக்கோயிலுக்கு எழுந்தருளி, லட்சார்ச்சனை மற்றும் நெய்க்குளத் தரிசன வைபவத்தை தொடங்கி வைத்து அருளாசி வழங்கினார். 

திருவண்ணாமலை ஸ்ரீசக்கர ராஜ நிலையத்தின் சார்பாக லலிதா உபாசகர்கள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டி.கணேஷ், ஆர்.ஐ. வினோத்குமார் உள்ளிட்ட  விழாக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இத் தரிசனத்தைக் காண வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் 
வந்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com