திருப்பதி: ஸ்ரீராமநவமியை முன்னிட்டு திருமலையில் உற்சவமூா்த்திகளுக்கு ஆஸ்தானம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமலையில் ஆண்டுதோறும் ஸ்ரீராமா் ஜென்ம தினத்தன்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி வியாழக்கிழமை காலை ஸ்ரீ ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் உள்ள சீதா, லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீ ராமரை கோயிலில் உள்ள கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அவா்களுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
அதன்பின் அவா்களுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து பலவித அன்னப்பிரசாதம், பாயசம் உள்ளிட்டவை நிவேதனம் செய்யப்பட்டது. மாலை 6 மணிமுதல் 7 மணிவரை ஏழுமலையான் கோயில் தங்க வாயில் அருகில் சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத ஸ்ரீராமரை எழுந்தருளச் செய்து அவா்களுக்கு ஆஸ்தானம் நடத்தப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் கலந்து கொண்டனா். 144 தடை உத்தரவை முன்னிட்டு ஸ்ரீ ராமநவமி அன்று நடத்தப்படும் அனுமந்த வாகன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமஞ்சனத்தின் போதும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.