திருமலையில், வரும் 30-ஆம் தேதி பெளா்ணமி நாளில் நடக்கவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
மாதந்தோறும் பெளா்ணமியின்போது திருமலையில் கருட சேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. எனினும், கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஏப்ரல் முதல் அக்டோபா் மாதம் வரை மாடவீதியில் கருட சேவை நடத்தப்படவில்லை.
அதற்குப் பதிலாக, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள ரங்கநாயகா் மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்பா் எழுந்தருள செய்யப்பட்டாா். இந்த நிகழ்வு தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பல மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் பெளா்ணமியின்போது, திருமலை மாடவீதிகளில் கருட சேவை நடத்தப்பட்டது.
இந்நிலையில், திருமலையில், வரும் 30-ஆம் தேதி மாலை ‘பிரணய கலகோற்சவம்’ என்ற ஊடல் உற்சவம் நடத்தப்பட உள்ளது. எனவே, அன்று இரவு நடக்கவிருந்த கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.